Feed Item
·
Added a post

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தூத்துகுடியில் ஒரு பாட்டி மூட்டையுடன் ஏறினார்.

கம்பார்ட்மென்டில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் சொன்னாள். பேராண்டி நான் நாளை காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன்.

அதிகாலை 2 .00 மணிக்கு இந்த ரயில் விழுப்புரத்தை சென்றடையுமாம்.

நான் அசந்து தூங்கி விடுவேன். எனவே என்னை விழுப்புரத்தில் 2.00 மணிக்கு எழுப்பி இறக்கி விட்டு விடு.

நான் எழுந்திருக்கவில்லை என்றாலும் குண்டுக்கட்டாக தூக்கி பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விடு.

நான் விடிந்ததும் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுவேன்.

சிரமத்திற்கு மன்னித்துக் கொள். இந்த உதவியை மட்டும் எனக்காக செய்வாயா? என்று கேட்டாள்.

அவன் சொன்னான், பாட்டி இதென்ன உதவி,கண்டிப்பாக நான் உங்களை விழுப்புரத்தில் இறக்கி விட்டு விடுகிறேன்.

அதற்காக உதவி என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள்,நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் என்றான்.

பாட்டியும் அவனை நம்பி நன்றாகத் தூங்கி விட்டாள்.

காலை ஏழு மணிக்கு எக்மோர் ஸ்டேசன் வந்ததும் அந்த பாட்டி 'குய்யோ முறையோ' என்று கத்தி அந்த இளைஞனை திட்டுகிறாள்.

நீ நல்லா இருப்பியா,நாசமா போயிருவ!உன்னை நம்பித்தானடா நான் தூங்கி விட்டேன்,

முடியாது என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நான் தூங்காமல் இருந்திருப்பேனே.

அல்லது வேறு யாரிடமாவது சொல்லி உதவி கேட்டிருப்பேனே

இப்போது மணி ஏழாகி விட்டதே! இனி நான் எப்படி பஸ் பிடித்து எத்தனை மணிக்கு விழுப்புரத்துக்குப் போவேன்,அதற்குள் முகூர்த்தம் முடிந்து சாப்பிட்டுவிட்டு மண்பத்தை காலிசெய்து விடுவார்களே என்று திட்டிக் கொண்டே இருந்தாள்.

பக்கத்திலிருந்தவர்கள் இந்த விசயத்தைக் கேள்விப் பட்டு அவர்களது பங்குக்கு அவர்களும் அவனை திட்டி, சாத்து சாத்து என்று சாத்தினார்கள்.

ஆனால் அவனோ இந்த திட்டையும் அடியையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் அவனிடம்,ஏண்டா பாட்டியும் நாங்களும் உன்னை இந்த திட்டு திட்டியும் இப்படி அடித்தும் கொண்டிருக்கிறோம்,நீ எதையும் பொருட்படுத்தாமல் அப்படி என்னத்தையடா யோசித்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்கள்.

அதற்கு அவன் சொன்னான் இந்தப் பாட்டியே என்னை இப்படித் திட்டுகிறதே,தூக்க கலக்கத்தில்

இந்தப் பாட்டி என்று நினைத்து இன்னொரு பாட்டியை சொல்லச் சொல்ல கேட்காமல் அதிகாலை 2.00 மணிக்கு தர தரவென்று இழுத்து விழுப்புரம் பிளாட்பாரத்தில் படுக்க வைத்து விட்டு வந்தேனே!அந்த பாட்டி என்னை எப்படி திட்டும்??என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்

  • 20