Account
People Spy Movies Radios Videos Sounds Photos Forums News Files
  •  
 
 
Article
19.01.2012 20:39    Comments: 0    Categories: திரை விமர்சனம்      Tags: வேட்டை  
வேட்டை

பயந்த சுபாவமுள்ள அண்ணன், வீரமும் துணிச்சலும் மிகுந்த தம்பி ஆகிய இரண்டு சகோதரர்களை பற்றிய கதை வேட்டை.

மாதவன்- ஆர்யா இருவரும் அண்ணன் தம்பிகள். இதில் அண்ணனான மாதவன் மிகவும் பயந்த சுபாவம் உடையவராக இருக்கிறார்.

சிறுவயதிருந்தே தன்னை யார் அடித்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தனது தம்பி ஆர்யாவைத்தான் அழைத்து செல்வார். இந்நிலையில் பொலிஸ்காரரான அவர்களின் அப்பா திடீரென்று இறந்து விட, அந்த வேலை மாதவனுக்கு கிடைக்கிறது.

இந்த வேலையில் மாதவனுக்கு துளியும் விருப்பமில்லை, ஆனால் ஆர்யா அவரை சமாதானம் பண்ணி வேலையில் சேர்க்கிறார். தூத்துக்குடி ரவுடிகள் ஏரியாவில் பொலிஸ்காரராக காலடி எடுத்து வைக்கிறார் மாதவன். ஆனால் அவர் காக்கி சட்டையை மட்டுமே மாட்டிக்கொள்ள, அவர் செய்ய வேண்டிய அடிதடி வேலைகளையெல்லாம் மாறுவேசத்தில் ஆர்யா செய்து முடிக்கிறார். இதனால் மாதவனுக்கு பாராட்டுகள், பரிசுகள் குவிகிறது.

ஆனால் ஒருகட்டத்தில் உண்மை வில்லன் கோஷ்டிக்கு தெரியவர, மாதவனை அடித்து உதைக்கின்றனர். இதனால் இனிமேல் நமக்கு இந்த வேலையே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார் அவர். ஆனால் அவருக்கு மனத்தைரியம் கொடுத்து, கோழைத்தனத்தை மாற்றி மீண்டும் வேலைக்கு செல்ல வைக்கிறார் ஆர்யா. அதுவரையில் சிரிப்பு பொலிசாக இருந்த மாதவன், அதன்பிறகு அதிரடி பொலிசாக மாறுகிறார். வில்லன் கோஷ்டிகளுடன் ஆவேசமாக மோதுகிறார்.

பிறகு இருவரும் சேர்ந்து வில்லன் கோஷ்டிகளை வேட்டையாடி முடிக்கிறார்கள் என்பதே வேட்டையின் கதை. இதற்கிடையில் அண்ணன் - தம்பிகளின் காதல் என்று படம் நகர்கிறது. நடிப்பை பொறுத்தவரை ஆர்யாவுக்கு ஒரே முகம், அண்ணன் மாதவனுக்குதான் ஆறுமுகம். எனக்கிந்த வேலை வேண்டாம் என்று பதறுவதில் ஆரம்பித்து, பக்காவாக எதிரிகளை சுளுக்கெடுக்கிற வரைக்கும் விதவிதமாக நடிக்கிறார்.

ஆர்யாவுக்கு நகைச்சுவை உணர்வு நன்றாக வருகிறது. ஆக்ஷனும் நகைச்சுவையும் நன்றாக வரும் எந்த நடிகரும் தோல்விப்படங்களைத் தொடர்ந்து கொடுக்க நேர்ந்தாலும் தமிழ்சினிமாவைப் பொறுத்த வரை அவர்கள் தோற்றுப் போவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஆர்யாவின் முதல் முழு நீள ஆக்ஷன் படமென்றுகூட வேட்டையைச் சொல்லலாம். ஆர்யா அடிவாங்கும் போது மாதவன் அந்த கூண்டில் ஏறித்தாண்டி வருவது மனோ சக்தி என்கிற தத்துவத்தின் அடிப்படையில் சாத்தியமே. கால்கள் முற்றிலுமாக செயல் இழந்தவர்கள்கூட அசாதரணமான நேரங்களில் எழுந்து நடந்திருக்கிறார்கள்- இது அறிவியல் பூர்வமான உண்மை.

இருந்தாலும் நேற்று மரண அடி வாங்கின வில்லனின் அடியாட்கள் அடுத்தா நாளே மலர்ச்சியாக வருவது கொஞ்சம் சலிப்பினை ஏற்படுத்துகிறது. ரெண்டுபேரும் வில்லன்களை தீர்த்துக்கட்டும் என்கவுன்ட்டர் மிகவும் அதிர வைக்கிறது தியேட்டரை. இதைப்போலவே ஆக்ஷன் ரசிகர்கள் ரசிக்கிற இன்னொரு காட்சி, தனது கட்டை விரலை வெட்ட வரும் வில்லனின் கட்டை விரலை ஆர்யா காவு கொள்வது.

சமீரா ரெட்டி, அமலா பால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணே மனைவியாக வருவது கண்டு தவிப்பதுமாகிய காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

உயர் பொலிஸ் அதிகாரியாக வரும் நாசர், அவ்வப்போது நகைச்சுவை செய்கிறார். ஏட்டு தம்பி ராமய்யா, வில்லன் அசுதோஷ் ரானா கவனம் ஈர்க்கிறார்கள்.

வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகரித்துள்ளனர். சமீரா மற்றும் அமலா பால் இடம்பெறும் ஒரு பாடல் மட்டும் நன்றாக உள்ளது.

ஆக்ஷன் படம் என்பதை மனதில் கொண்டு லாஜிக்குகளை யோசிக்க வைக்காமல் விறுவிறு என காட்சிகளை நகர்த்துகிறார் லிங்குசாமி. என்றாலும், அவரது பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தலை தூக்குகிறது.

குறிப்பாக 'ரன்' படத்தின் பாடல் காட்சிகள் இங்கேயும் எட்டிப்பார்க்கின்றன. மேலும் வழக்கமான பொலிஸ் கதைகளின் சாயலும், வில்லன் அதை எதிர்கொள்ளும் காட்சியமைப்புகளும் இரண்டாம் பாகத்தின் சுவராஸ்யத்தை குறைக்கிறது. ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.

நடிகர்கள்: ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி, நாசர், தம்பி ராமய்யா, அசுதோஷ் ரானா
இசை: யுவன்சங்கர் ராஜா
இயக்கம்: லிங்குசாமி
தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்

 

 
Comments
Order by: 
Per page: 
 
  • There are no comments yet
Actions
Rating
0 votes
Copyright © 2012 tamilpoonga.com